தமிழக சுற்றுலா தலங்கள் | ||||||
மெரினா கடற்கரை சென்னையில் வங்கக் கடலோரம் அமைந்துள்ளது மெரினா கடற்கரை. இதன் நீளம் 12 கிலோ மீட்டர் ஆகும். இது உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரை என்று மக்களால் பரவலாகக் கூறப்பட்டாலும், இதே போன்று நீளமான கடற்கரைகள் பல உள்ளன. உதாரணமாக, பிரேசிலில் உள்ள பிரேயா டோ கேசினோ (Praia do Cassino), வங்க தேசத்திலுள்ள காக்ஸ் பஜார் (Cox's Bazar), அமெரிக்க குடா கடலில் உள்ள பட்ரே ஐலண்ட் (Padre Island), ஆஸ்திரேலியாவிலுள்ள நைன்டி மைல் பீச் (Ninety Mile Beach) மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டில் துபாயில் உள்ள கடற்கரைகளும் நீளமானவையே. இருந்தாலும் மெரினா கடற்கரை ஒரு மாநகரை ஒட்டி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இக்கடற்கரையின் அகலம் 437 மீட்டர் ஆகும். மெரினா கடற்கரையை ஒட்டிய சாலை ஓரத்தில் சென்னை பல்கலைகழகம், செனட் ஹவுஸ், சேப்பாக்கம் அரண்மனை, மாநிலக் கல்லூரி, பொதுப்பணித்துறை அலுவலகம், விவேகானந்தர் இல்லம் (ஐஸ் ஹவுஸ்), தமிழக காவல்துறை தலைமை அலுவலகம் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள் பல உள்ளன. கடற்கரையில் சென்னை பல்கலைக்கழகத்திற்கு எதிரே திராவிட இயக்கத்தின் முன்னணி தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாதுரை அவர்களின் நினைவிடம் அமைந்துள்ளது. அதற்கு அடுத்து திராவிட இயக்கத்தின் முன்னணி தலைவரும் தமிழக முன்னாள் முதல்வரும் பிரபல தமிழ் நடிகருமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் நினைவிடம் அமைந்துள்ளது. இக்கடற்கரையைக் காண தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். துறைமுகத்திலிருந்து சாந்தோம் வரை விரிந்து பரந்துள்ள இக்கடற்கரையை 1880 ஆம் ஆண்டு ஆங்கிலேயேர் அழகுற வடிவமைத்தனர். இப்பெருமை ஆங்கிலேய கவர்னர் மவுண்ட் ஸ்டூவர்ட் எல்பின் ஸ்டோன் கிராண்ட் டப் என்பவரையே சேரும். மெரினா கடற்கரையில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், கண்ணகி, திருவள்ளுவர், ஜி.யூ. போப், ஔவையார், காமராஜ், பாரதியார், நடிகர் சிவாஜி கணேசன், ஆகியோரின் சிலைகளும், உழைப்பாளர் சிலையும் உள்ளது.
|
|
|