தமிழக சுற்றுலா தலங்கள் | ||||||
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம், திருச்செந்தூர் ![]() பழந் தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்ற இந்துக் கடவுளான முருகப் பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கருதப்படுகின்ற ஆறு கோயில்கள் தமிழ் நாட்டில் உள்ளன. அவை அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன். இவற்றுள் இரண்டாவதாகக் குறிப்பிடப்படுவது திருச்செந்தூர் ஆகும். இது திருச்சீரலைவாய் எனவும் அழைக்கப்படும். மிக அரிதாக முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள கோயில் இதுவாகும். 130 அடி உயரம் கொண்ட இக் கோயிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில் 2000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. சூரபத்மன் என்ற அரக்கன் தனது குருவான சுக்கிராச்சாரியாரிடம் உபதேசம் பெற்று தனக்கு சர்வ வல்லமை வேண்டி சிவபெருமானை நோக்கி கடுந்தவம் மேற்கொண்டான். சிவபெருமானும் அவனுக்கு காட்சி கொடுத்து, தமது சக்தியன்றி வேறு எந்த சக்தியாலும் அவனுக்கு மரணம் கிடையாது என்று வரம் அருளினார். அதன் பிறகு சூரபத்மனின் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போனது. அவனால் துன்பத்திற்கு உள்ளான தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சூரனை அழிக்க சிவபெருமான் தனது ஞானக்கண்ணிலிருந்து ஆறு சுடர்களை உருவாக்கினார். ஆறு சுடர்களும் ஆறு குழந்தைகளாக உருவெடுத்தன. கார்த்திகைப் பெண்கள் அறுவர் குழந்தைகளுக்குப் பாலூட்டினர். அம்மையும், அப்பனும் குழந்தைகளைப் பார்க்க வந்தனர். பார்வதி தேவி அந்த குழந்தைகளைத் திருக்கரங்களால் சேர்த்து அணைத்தாள். அப்போது ஆறு குழந்தைகளும் ஆறுமுகமும் பன்னிரண்டு கைகளும் கொண்டு ஒரு குழந்தையாக மாறியது. பார்வதி தேவியின் பாத சிலம்பில் நவசக்திகள் தோன்றினர். நவசக்திகள் வயிற்றில் வீரபாகு முதலிய இலட்சத்து ஒன்பது வீரர்கள் தோன்றினர். இவர்கள் முருகனுக்கு படைவீரர்களாக ஆனார்கள். சிவபெருமான் வெற்றி தரும் வேலை முருகனிடம் தந்தார். தன் அம்சமாகிய பதினொரு ருத்ரர்களைப் படைக்கலமாக்கி முருகனிடம் தந்தார். அம்மையப்பர் ஆசியுடன் முருகன் படைகளோடு திருச்செந்தூர் வந்து தங்கினார். முருகப் பெருமான் வீரபாகுவைச் சூரனிடம் தூதனுப்பிச் சிறை வைத்த தேவர்களை விடுவித்திடுமாறு செய்தி அனுப்பினார். சூரபத்மன் அதற்கு மறுத்தார். ஆகவே முருகப் பெருமான் சூரபத்மனோடு போரிட்டார். பத்து தினங்கள் நடந்த போரில் அசுரர்களை வென்று சூரபத்மனை மயில் சேவலாக மாற்றினார். மயில் முருகனுக்கு வாகனம் ஆகியது. சேவல் என்று முருகன் புகழ் கூவியது. ஐப்பசி மாதம் அமாவாசையை அடுத்த 6ம் நாள் முருகன் சூரனை வென்றான். இதுவே கந்த சஷ்டி என்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. சூரபதமனின் தளபதிகளான யானைமுகன், சிங்கமுகன், சூரபன்மன் ஆகிய மூன்று அரக்கர்களை ஒழித்தான். இக்காலத்திலும் இம்மூன்று அரக்கர்களும் மாயை, கன்மம், ஆணவம் ஆகிய குணங்களாக மக்களிடம் குடியிருக்கிறார்கள். இவர்களை ஒழிக்கவும் திருச்செந்தூரான் அருள் பாலிக்கிறான். இந்த மூன்று துர்குணங்களையும் விட்டொழித்தால் சூரனைப் போல இறுதியில் இறைவனை அடைய முடியும். இந்த சூரசம்ஹார சம்பவத்தைச் சித்தரிக்கும் வைபவம் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் புடை சூழ நடைபெறும். தீராத நோய் நீங்க வேண்டும் என்றும், பிள்ளைப்பேறு வேண்டியும், பல பக்தர்கள் சஷ்டி விரதம் மேற்கொள்கின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இயற்கையை வழிபட்டனர். இயற்கையை முருகு எனப் பெயரிட்டு வணங்கினர். காடு, மலை, அருவி, கடற்கரை ஆகிய இடங்களில் கோவில் அமைத்து வழிபட்டனர். அத்தகைய தலங்களுள் ஒன்று திருச்செந்தூர் ஆகும்.
முருகன் கோவில்கள் அட்டவணை
தமிழக கோவில்கள் அட்டவணை தமிழக சுற்றுலா தலங்கள் அட்டவணை இந்திய சுற்றுலா தலங்கள் அட்டவணை
|
|
|