தமிழக சுற்றுலா தலங்கள் | ||||||
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம், திருச்செந்தூர் ... தொடர்ச்சி ... ![]() பதினாறாம் நூற்றாண்டில் நெல்லை மாவட்டம் திருவாங்கூர் மன்னர் ஆட்சிக்குட்பட்டிருந்த போது, இந்தக் கோயில் சீரமைக்கப்பட்டது என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. எனினும் தற்போது உள்ள கோவில்களை உருவாக்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் காசி சுவாமிகள், மௌன சுவாமிகள் மற்றும் ஆறுமுக சுவாமிகள் என்ற மூவர் சுவாமிகள் ஆவர். இவர்கள் மூவரும் தத்தமது காலங்களில் கோயிலைச் சுற்றி மண்டபங்களையும், கோபுரங்களையும் அமைத்துள்ளனர். இவர்கள் மூவரும் இத்தலத்திலேயே ஜீவசமாதியும் அடைந்துள்ளனர். இவர்களது சமாதிகள் இன்றும் கடற்கரையை ஒட்டி காணப்படுகின்றன. இவர்களுக்கு பின்னர் வந்த தேசிக மூர்த்தி சுவாமிகள் ராஜகோபுரத்தை கட்டியதாக கூறப்படுகிறது. இக்கோவிலில் மூலவர் பெயர் பாலசுப்பிரமணியர். கடற்கரையோரம் நின்று அருள்பாலிப்பதால் 'கடற்கரையாண்டி' என்றும் அழைக்கப்படுகிறார். இக் கோவிலில் மூலவர், வள்ளி, தெய்வானை கோயில்களுக்கு போத்திகளும், ஆறுமுகப் பெருமான், நடராஜர், சனீஸ்வரர் கோயில்களுக்கு சிவாச்சாரியார்களும் பூஜை செய்கின்றனர். வெங்கடாசலப் பெருமாள் கோயிலில் வைணவ ஆச்சாரியார்கள் பூஜை செய்கின்றனர். கோயில் திருப்பணி செய்த மூவர் சமாதிகளில் ஓதுவார்கள் பூஜை செய்கின்றனர். மூலவரின் இடது பாதத்தின் அருகே தங்கச் சீபலி வைக்கப்பட்டுள்ளது. வலது பாதத்தருகே வெள்ளியாலான சீபலி உள்ளது. இந்த சீபலி மூலவரைப் போலவே உள்ள ஒரு சிறு விக்ரகம். தினமும் கோயில் பிரகாரங்களில் வலம் வந்து எல்லா சந்நிதிகளுக்கும் சென்று அந்தந்த கடவுளர்களுக்கு முறையாக நிவேதனம் செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு இந்த சீபலிக்கு உண்டாம். தன் கோயிலில் தன்னுடனே உறையும் பிற கடவுளர்களுக்கே படியளக்கும் இந்த பாலகுமரன், தன்னை நாடும் பக்தர்களை அவ்வாறே காத்து அருள்வான் என்பது உறுதி. கேரள மன்னர் மார்த்தாண்டவர்மன் இவற்றை கோவிலுக்கு வழங்கியுள்ளார். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் திருவாவடுதுறை ஆதீனத்தை சேர்ந்த தேசிகமூர்த்தி சுவாமிகளின் கனவில் திருச்செந்தூர் முருகன் தோன்றி கோயில் திருப்பணியை மேற்கொள்ளும்படி ஆணையிட்டாராம். அதன்படி அவர் இங்கு தங்கி கோபுரம் கட்டி முடித்திருக்கிறார். அவ்வாறு கோபுரம் கட்டியபோது அந்தப் பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு கூலி கொடுக்க அவரிடம் பணமில்லை. மனதார முருகனை வேண்டிக்கொண்டு, அவர் பிரசாதமான விபூதியை இலையில் மடித்து ஒவ்வொருவருக்கும் கொடுத்தார். அந்த இலையை தூண்டுகை விநாயகர் கோயிலை தாண்டி சென்றதும் திறந்து பார்க்குமாறு கூறினார். பணியாளர்களும் அப்படியே பார்த்தபோது அவரவர் வேலைக்கேற்ப ஒவ்வொருவருக்கும் தனிதனியே ஊதியம் அந்த விபூதி இலைக்குள் இருந்தது கண்டு அதிசயித்தனர். ஆனால் கோபுரத்தின் ஆறாம் நிலை கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்ட போது இந்த அற்புதம் நின்று விட்டது. சுவாமிகள் மிகவும் வருந்தினார். ஆனால் அன்றிரவே முருகன் அவரது கனவில் தோன்றி காயல்பட்டினத்தில் வசிக்கும் சீதக்காதி என்னும் வள்ளலிடம் சென்று பொருள் பெற்று வருமாறு பணித்தார். ஆனால் வள்ளலோ, சுவாமிகள் கொடை கேட்டவுடனேயே ஒரு மூட்டை உப்பை எடுத்துக் கொடுத்தார். சுவாமிகளுக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. பணத்தை எதிர்பார்த்தால் உப்பு கிடைக்கிறதே என்று வருந்தினார். ஆனாலும் எந்த மறுப்பும் சொல்லாமல் உப்பு மூட்டையை வாங்கிச் சென்றார். திருச்செந்தூர் வந்து சுவாமிகள் மூட்டையைத் திறந்து பார்த்தால் அதற்குள் தங்கக் காசுகள் இருந்ததைக் கண்டு வியந்தார். மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த காசுகளைக் கொண்டு கோபுரத்தைக் கட்டி முடித்தார் சுவாமிகள். கோயிலின் வடபுறத்தில் வள்ளி குகை அமைந்துள்ளது. இங்கு திரிசுதந்திரர்கள் பூஜை செய்கின்றனர். குகைக்குள் உள்ளே நுழையும் வாயில் 4 அடி உயரமே உள்ளது. குனிந்துதான் செல்ல வேண்டும். குகைக்குள் வள்ளியம்மன் சிலை சுவரையொட்டி அமைந்துள்ளது. முருகன் வள்ளியைச் சிறையெடுக்க வந்தபோது வள்ளியின் தந்தை நம்பிராசன் முருகனை துரத்தினான். முருகன், வள்ளியை இக்குகையில் ஒளிந்திருக்கச் சொல்லி பிள்ளையாரை காவல் வைத்துவிட்டு போருக்குச் சென்றதாக புராணம் சொல்கிறது. தெய்வயானையை திருமணம் முடித்து வருவதைக் கண்ட முதல் மனைவியான வள்ளி, முருகன் மீது கோபம் கொண்டு இக்குகையில் வந்து ஒளிந்து கொண்டதாகவும் ஒரு கதை கூறப்படுகிறது.
முருகன் கோவில்கள் அட்டவணை
தமிழக கோவில்கள் அட்டவணை தமிழக சுற்றுலா தலங்கள் அட்டவணை இந்திய சுற்றுலா தலங்கள் அட்டவணை
|
|
|